2009-09-30

நரசிங்கமுனைய நாயனார்


அறுபத்துமூவர் துதி
தத்து மூதெயில் மூன்றுந் தழல் எழ
முத்து மூரல் முகிழ்த்த நிராமய
சித்த மூர்த்திதன் தாளிணை சேர் அறு
பத்து மூவர் பாதமலர் போற்றுவாம்

சேக்கிழார் துதி
தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி

நரசிங்க முனையர் குருபூஜைத் தினம் - புரட்டாதி மாத சதய நட்சத்திரம் -02/10/2009

நரசிங்கமுனையர் திருமுனைப்பாடி எனும் குறுநிலத்தின் மன்னராக விளங்கியவர். தமக்குரிய சேமிப்புச் செல்வமாக திருவெண்ணீற்றையே கொண்டவர். அவர் பகைவர் எவரும் இல்லாத தூய்மையுடைவர். திருக்கோயில்களைப் பேணிக் காப்பவராவார். அத்துடன் இவர் சிவ நெறித்தொண்டுகளை கவிலும் எண்ணுபவர். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் எல்லாம் சிவனடியார்களுக்கு உபசாரம் செய்யும் இயல்புடையவர். அந்நாளில் சிவனடியார்களுக்கு நூறு பசும்பொன்னுக்கு குறையாது வாரி வளங்கி திருவமுது செய்வது அவரது உயர் வழிபாடு ஆகும்.

வழக்கம் போல ஒரு திருவாதிரை நன்னாளில் நடந்த சம்பவம் என்னவென்றால், அடியார் ஒருவர் காம வெறியின் தோற்றமாகவும் மேனியில் திருநீறு குறையாதவராயும் அவ்விடத்தில் தோன்றினார். அங்கிருந்த எல்லோரும் அவரை முகமெடுத்துக்கூடப் பாராமல் திரும்பினர். ஆனால் நரசிங்க முனையர் அவரை அணுகி அவர் வடிவத்தை உற்றுப் பார்க்கையில் சிவ சின்னமான திருநீறு மட்டுமே தென்பட்டது. திருநீறு அணிந்தவர் யாவராயினும் இகழ்ச்சிக்குரியவர் அல்லர் என்பதை அவர் நன்கு அறிந்தவராகையால் அந்த அடியாரை உபசரித்து மற்றவர்களுக்கு கொடுத்த உபசாரம் போல் இருமடங்காய் கொடுத்து அவரைத் தொழுது இனிய மொழி கூறி விடைகொடுத்து வழியனுப்பினார். இது நரசிங்க முனையரின் அற்புதமான ஓர் செயல் ஆகும்.

நரசிங்கமுனைய நாயனார் திருவடி நீழலைச் சென்றடையும் மார்க்கத்தை அடைவதற்காக சிவத்திருத்தொண்டுகளை நெறிதவறாது செயலாற்றி சிவசிந்தையுடைவராய் வாழ்ந்து, ஈற்றில் சிவனடியடைந்து மெய்வழி அன்பு கொண்டு மீளா நிலை பெற்றார்.

திருச்சிற்றம்பலம்


0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக