2009-09-30

நரசிங்கமுனைய நாயனார்


அறுபத்துமூவர் துதி
தத்து மூதெயில் மூன்றுந் தழல் எழ
முத்து மூரல் முகிழ்த்த நிராமய
சித்த மூர்த்திதன் தாளிணை சேர் அறு
பத்து மூவர் பாதமலர் போற்றுவாம்

சேக்கிழார் துதி
தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி

நரசிங்க முனையர் குருபூஜைத் தினம் - புரட்டாதி மாத சதய நட்சத்திரம் -02/10/2009

நரசிங்கமுனையர் திருமுனைப்பாடி எனும் குறுநிலத்தின் மன்னராக விளங்கியவர். தமக்குரிய சேமிப்புச் செல்வமாக திருவெண்ணீற்றையே கொண்டவர். அவர் பகைவர் எவரும் இல்லாத தூய்மையுடைவர். திருக்கோயில்களைப் பேணிக் காப்பவராவார். அத்துடன் இவர் சிவ நெறித்தொண்டுகளை கவிலும் எண்ணுபவர். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் எல்லாம் சிவனடியார்களுக்கு உபசாரம் செய்யும் இயல்புடையவர். அந்நாளில் சிவனடியார்களுக்கு நூறு பசும்பொன்னுக்கு குறையாது வாரி வளங்கி திருவமுது செய்வது அவரது உயர் வழிபாடு ஆகும்.

வழக்கம் போல ஒரு திருவாதிரை நன்னாளில் நடந்த சம்பவம் என்னவென்றால், அடியார் ஒருவர் காம வெறியின் தோற்றமாகவும் மேனியில் திருநீறு குறையாதவராயும் அவ்விடத்தில் தோன்றினார். அங்கிருந்த எல்லோரும் அவரை முகமெடுத்துக்கூடப் பாராமல் திரும்பினர். ஆனால் நரசிங்க முனையர் அவரை அணுகி அவர் வடிவத்தை உற்றுப் பார்க்கையில் சிவ சின்னமான திருநீறு மட்டுமே தென்பட்டது. திருநீறு அணிந்தவர் யாவராயினும் இகழ்ச்சிக்குரியவர் அல்லர் என்பதை அவர் நன்கு அறிந்தவராகையால் அந்த அடியாரை உபசரித்து மற்றவர்களுக்கு கொடுத்த உபசாரம் போல் இருமடங்காய் கொடுத்து அவரைத் தொழுது இனிய மொழி கூறி விடைகொடுத்து வழியனுப்பினார். இது நரசிங்க முனையரின் அற்புதமான ஓர் செயல் ஆகும்.

நரசிங்கமுனைய நாயனார் திருவடி நீழலைச் சென்றடையும் மார்க்கத்தை அடைவதற்காக சிவத்திருத்தொண்டுகளை நெறிதவறாது செயலாற்றி சிவசிந்தையுடைவராய் வாழ்ந்து, ஈற்றில் சிவனடியடைந்து மெய்வழி அன்பு கொண்டு மீளா நிலை பெற்றார்.

திருச்சிற்றம்பலம்


2009-09-07

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 10


இசையும் கதையும்


சிறீ வள்ளி திருமண ஒழுங்குகள்.

சிற்றூர் அடைந்து சிறுமி வள்ளி நாயகியை
முற்றும் உணர் வேந்தர் வடிவேற்கரசருக்கு
சுற்றம் முற்றும் சூழ்ந்து நின்று துதி செய்ய
சற்றும் தாமதியாமல் பணிந்து தாரை வார்த்தான் நம்பிராசன்

திருமணப்பாட்டு

கன்னி வள்ளி நாயகிக்கும் கந்தப்ப நாதனுக்கும்
மன்னும் உயர் சதுர் மறையின் வகுத்த விதி தவறாமல்
உன்னு திரு மணக் கிரியை ஓங்கு திருவருள் கொண்டு
முன்னுணரும் நாதரமா முனிராசன் செய்தாரே

திருவருட் குறிப்பாலே - நாரதர் தீவளர்த்து வேதவிதிக் கிரியை செய்தார்
அரியயன் சுரர் சூழ - சிவனார் ஆதி சக்தியோ விண்ணின்று மகிழ்ந்தார்
தேவர் பூ மழை சொரிந்தார் - ஞானச் சிங்கார வேலனுக்கு வாழ்த்துரைத்தார்
பாவலர் பாடி நின்றார் அடியார் பத்திரசத்தேனொழுகி ஆடி நின்றார்

திருமண வாழ்த்து

பல்லவி
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே மங்களமாய் வாழ்கவே
(வாழ்க)

அனுபல்லவி
வள்ளல் முருகன் வள்ளி தெய்வ யானையொடு வாழ்கவே
(வாழ்க)

சரணம்
ஏழ்க திருடன் ஒளியூமாகி இன்பமலரும் மணியுமாகி
சூழுமறைகளும் செயலுமாகி சுகமும் பொருளும் பயனுமாகி
அறமும் பொருளும் சுகமும் பெருக அரிய மறையின் நெறிகள் பெருக
அறிவு மிளிரும் கதிகள் பெருக அன்பு மணத்தின் பண்பு பெருக
(வாழ்க)


சிறீ வள்ளி திருமணம் முற்றிற்று

------ திருச்சிற்றம்பலம்
--------


சிறீ வள்ளி திருமணம் - பாகம் 09


இசையும் கதையும்

வள்ளி முருகனுடன் இணைந்தவுடன்
மிகவும் மெய் கலங்கி உணர்ச்சி வசப்படுதல்

வேதமே காணாத மெய்யடிகள் நொந்தனவோ
வேலாயுதா எனைத்தேடி வெகுவாய் நடந்தனையோ
தீமையேற் காயிரங்கும் சிவகுருவே ஆதி அந்தம் இல்லா அறுமுகனே
உமது தாளில் அடைக்கலமே

முருகன் பாங்கியை பார்த்து

சமர்த்தியமாய் சாதனை புரிந்து வள்ளியை கையடை செய்தாய்
சேமாமாக நீ வாழ்க! சித்தம் மிகு கருணை செய்வேன்

(பாங்கி அவ்விடத்தை விட்டு செல்லுதல்)

முருகனும் வள்ளியும் பூங்காவுக்கு செல்கிறார்கள்.
நம்பியின் மனைவி கொடிச்சி வள்ளியைக் காணவில்லையெனத் தேடுகிறாள்.

வள்ளியை காணவில்லை வள்ளியைக் காணவில்லை
நள்ளிரவு நேரத்தில் நானும் நன்கு தூங்கிவிட்டேன்
எங்கு தான் போயிருப்பாள் என்நெஞ்சு கலங்குகிறது
எல்லா இடமும் தேடியும் காணவில்லை வள்ளியை

நம்பி : என்ன வள்ளியைக் காணவில்லையா? இது என்ன வம்பு?

கொடிச்சி : ஓமப்பா.. வள்ளியை இங்கு காணவில்லை… ஐயையோ!!!

நம்பி : இது என்ன அநியாயம். என் செல்வம் வள்ளியம்மாவுக்கு ஏது நடந்தது? இனி நான் செய்வது என்னவோ?

வேடுவர்கள் கூடுகிறார்கள்

நம்பி மெய்நடுங்க கோபம் கொண்டு அழுது வெம்பி
தனது வேடுவர் கூட்டத்துடன் தேடுதல் மேற்கொண்டான்

போர் எழுச்சி

இலங்கிய வில்லிசை விளங்கிடவே
ஈட்டி வாள் பாலம் அம்பும் ஏனைய கருவிகளும் சேர ஒலி
எடுத்தனரே மிக விசையுடனே சென்றனர் வள்ளியைத்தேடி
வேட்டை நாய் வழி காட்ட சீர் மிகு திருப்பூங்கா ஒன்றில்
மாட்சிமை பொருந்திய வள்ளலுடன் இருப்ப வள்ளியைக் கண்டனரே

அவர்களைக் கண்ட வள்ளி முருகனுக்கு கூறுகிறாள்

வருகின்ற வேடுவர்கள் மிகக்கொடியவர்கள்
கொடூரம் மிகச்செய்வார்கள் என்கோவே
கருகின்றது என்நெஞ்சம் மிகவும் ஐயா
ஒருவாறு நாம் இவ்விடத்தை விட்டு அகலுவோமா?

முருகன் புன்னகையுடன் வள்ளிக்கு கூறுகிறார்

வேடுவர்கள் உன்னை இனித் தீண்ட மாட்டார்
அவர்கட்கு கேடு வருவதை முன் அறிய மாட்டார்
அவர்கள் பாடு நீ இப்போது நன்கறிவாய்

என்று கூறி கோடுயர் கோழிக் கொடி கொக்கரக்கோ என ஒலிக்க வைத்தார். அக்கணத்திலே அங்கு எதிர்த்து வந்த வேடுவர் கூட்டமெல்லாம் மடிந்தார்கள். தனது பெற்றார் சுற்றத்தார் எல்லோரும் இறந்த நேரத்தில் வள்ளி நாயகியை முருகன் சோதிக்க விரும்புகிறார் முருகவேள் பெருமான்.

நாம் இவ்விடத்தை விட்டு செல்வோம் எனக் கூறியதும், வள்ளி எவ்வித தயக்கமும் இன்றி கந்தனுடன் இணைந்து சென்றாள்.
- பதியோடு பாசம் சேர்ந்து விட்டது பசுவை நீக்கி விட்டு



நாரதர் வருகை

தந்தை தாய் தமர் அழிய இந்தத்
தையல் தனைக் கொண்டு செல்வது தகுமோ
எந்தையே அருள் புரிவீர்

எம்முருகன் சம்மதித்து புன்னகை செய்து
வள்ளியின் புகழை இந்த உலகம்
உணரும் தத்துவத்தைக் காட்ட நினைந்து

"வள்ளியே இவர்களை நீ உடனே உயிர் பெற வழங்குக வரம்" என இளங்குமரன் எடுத்துரைத்தார்.

வள்ளி, இறந்து கிடந்தவர்களை உயிர் பெறும்படி தன் மனதில் கூற யாவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

நம்பி முருகனை வணங்குதல்

நீல மயில் ஏறும் நிர்மல மூர்த்தியே
கோலக் குறத்தி தனை ஏற்கும் குணசீலா
மூல காரணத்தை அறியாது என் செய்த பிழையை
ஞாலத்தார் அறிய மன்னித்து அருளினையோ
செய்த பிழை பொறுத்தருளும் - தேவரீர்
சிற்றூர்க்கு வந்து மணம் செய்திடுவீர் - என்றும்
வேதம் புகழ் நாரதரும் வருவீராக…

பாகம் 09 முற்றிற்று...


2009-09-06

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 08


இசையும் கதையும்


முருகன் வள்ளியைத் தன்னுடன் இணைத்து விடும்படி பாங்கியை வேண்டல்

மாதே கேள் நின் தலைவி வள்ளி எனும் பெண்ணரசை
நாரணனர் தந்த ஞானச் சிறுமிதன்னை
காரணமாகிக் காட்டிற் பிறந்தவளை
சீரான கற்புடைய கனியில் வடித்தெடுத்த
தேனான வள்ளியை நான் வதுவை செய்வதற்கு வழி செய்யாயோ…

பாங்கி மறுப்பு

கள்ளமில்லா வடிவேலனை பார்த்து பாங்கி கூறுதல்

ஐயரே பெரியவரே இந்த செய்தி தனை கேட்டு நீர்
உய்யும் வழி செய்தால் வேடுவரோ பொல்லாதவர் காணும்
உம்மையும் கொன்றிடுவார் என்னையும் துன்புறுத்துவார்
செய்யும் வகை அறியேன் ஓடி மறைந்து விடும்

முருகன் பதில்

வள்ளி தனை நான் மணக்க வழியில்லா விட்டாலோ
மடலேறு வேனென்று வடிவேலன் கட்டுரைத்தார்
(அவமானமாகிய எச்சரிக்கை முருகன் கூற)

பாங்கி

ஐயா கலங்காதீர் அறுக்க மடல் ஏறாதீர்
அம்மை தனை நான் கொணர்ந்து தருவேன் அம்மட்டும் நீர்
மையாகும் நன்னிழல் மாதவிப் பொதும் பரில்
மறைந்திருப்பீர் எம்பெருமானே! என அகன்றாள்

வள்ளியை முருகனிடம் ஒப்படைத்தல்

பாங்கி


வள்ளி நாயகியே நீ பதியை அடைவதற்கு பல்லாண்டு காத்திருந்தாய்
வள்ளல் நாயகன் பால் நான் ஒப்படைப்பேன்
கள்ளமில்லாக் கற்பரசே கவலையில்லாமல் என்னுடன் வா

என்று பாங்கி கூட்டி செல்ல

வள்ளி

என் அருமைத்தோழி நான் உன்னை மறவேன்
நீ என்னை அவருடன் சேரச் செய்த பணியை
(பாங்கி இருவரையம் விட்டு அகன்றாள்)

உரை

இருவரும் கலந்து இணையிலாத இன்ப நிலையை அடைந்தனர். பின்பு முருகன் வள்ளியை விடைபெற்று அகன்றார். புனத்தை அடைந்த வள்ளியை தினை அறுவடை காரணமாக வேடுவர் சேரிக்கு அழைத்து செல்கிறார்கள். சிற்றூர் அடைந்த வள்ளி தன்னுயிரை நாடி வந்த நாயகரை
என்றைக்கு காண்பேனோ என என்புருக கரைந்து கண்கள் கலங்கி புலம்பி சோர்ந்து வீழ்ந்தாள்...

நம்பி வருந்திப் பரிகாரம் செய்தல்

எனது மகள் வள்ளி நாயகியே உனது நிலை மாறவேண்டியதேன்?
உனக்கு நேர்ந்ததுவோ என்ன என்று வெறியாட்டச்சாமியை அழைத்து வந்து பரிகாரம் செய்வித்தான். தமது குலதெய்வமாகிய கந்தப்பெருமானுக்கு வேண்டிய விழா எடுத்தார்கள். வெறியாட்டக் கூத்தும் வேலனுக்கு விழா எடுத்தும் யாதும் பயன் இல்லை. கணமேனும் கண்ணுறுக்கம் கற்பரசி கொள்ளவில்லை. என் நாயகனைப் பிரிந்து நான் உறங்கேன் என வள்ளி விழித்திருக்கையில்...

முருகன் தினைப்புனத்துக்கு வருகை

அங்கே வள்ளியை காணாது மிககவும் சலிப்படைந்தார்

தினைப்புனத்தில் உள்ள பட்சிகாள் விலங்குகாள்
என்மனத்தை பறிகொடுத்த வள்ளி தனைக் கண்டீரோ
என்குறை தீர யார் தான் உதவுவீரோ

முருகன் வள்ளி இருக்கும் இடத்தை தேடி அறிந்து, குடிசைப்பக்கமாக வந்து சேர்ந்தார்.
தனக்கு இசைவான இகுளையாகிய பாங்கியிடம் தான் வந்ததை அறிவித்தார்.

பாங்கி வள்ளியிடம் செல்லுதல்

வள்ளியம்மா வள்ளியம்மா உன்னை அழைத்துச்செல்ல
வெள்ளிமலை நாதர் அருளியவர் உனைத்தேடி வந்துள்ளார்
நள்ளிருளில் இப்போ நான் உன்னை அவரிடம் ஒப்படைப்பேன்
எள்ளளவும் சுணங்காமல் என்னுடன் நீ
எடுத்த அடியோசை கேட்காமல் வந்து விடு

எல்லோரும் நித்திரையில் இருந்த நேரத்தில் தோழியுடன் வள்ளி செல்லுதல்

சாந்த நடை நடந்து தாய் தந்தை தமரயலார்
தழுவு நாய் கண்ணுறங்க தருணமதைப் பார்த்திருந்து
இருண்ட நடு நிசியில் மெதுவாக அடி எடுத்து
வாய்ந்த கதவு திறந்து வழி பார்த்து நின்ற வள்ளலிடம்
வள்ளியை ஒப்படைத்தாள்…

பாகம் 08 முற்றிற்று...


2009-09-05

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 07


இசையும் கதையும்


முருகன் வள்ளிக்கு காட்சி கொடுக்கிறார்

ஓராறு வதனமும் ஈராறு கரமும்
ஓங்கார மயிலுடன் உற்றகழல் அடியும்
சீராய் விளங்கவே சிவகுமரன் நின்றான்
சீமாட்டி வள்ளியும் தெளிவாகக் கண்டாள்

முருகன் தோன்றியதும் வள்ளி பாடுகிறாள்

கைவேலின் அழகுடனே கைகுலிசமுதலாம் படைக்கலங்கள்
மை அணி கண்டன் தந்த கந்தன் பொருந்து கரங்கள் ஈராறும்
பொலிந்த முகங்கள் ஓராறும் இசைந்து தெரிந்த புரி நூலும்
மகிழ்ந்து சுரந்த இருதாளும் மகிழ்ந்து விளங்கு மயிலேறும்
திருந்தி அசைந்த கொடியாவும் சிறந்து விளங்கும் பெருமாளே


வேண்டுவார்க்கு வேண்டும் வரம் நல்கும் வள்ளலே வடிவேலா
மீண்டும் நான் பிறவிக் கடல் அழுந்தாமை புரிவாயே - என்னை
ஆண்டு கொள்ள வந்த அரசே அடியேன் அறியாமையால்
கொண்ட எனது பிழை பொறுத்தருள்வீர்...


முருகன்

பெண்ணே நீ என்னை அடைவதற்கு செய்த
கைவண்ணத்தாலே என்கருத்தில் உனைக்கொண்டேன்
சீவனைத் தேடிச் சிவம் வந்தணைக்கும் செய்கையீது
கன்னியே நீ சென்று தினைப்புலத்தைக் காவல் செய்வாயாக
மீண்டும் அங்கு நான் வருவேன்

வள்ளி தினைப்புலம் செல்ல முருகனும் அகன்றார்


எந்தை கந்தப்பன் எனை வந்து ஆட்கொள்வார்
அந்தோ இனி எனக்கு ஓர் குறையும் இல்லையென்று வள்ளி
புத்தி தடுமாறி விட்டேன் எனினும் இப்போ நான் அறிந்தேன்
தந்தி முகற்கிளையவர் தனது மெய்யுருவம் காண்பித்தார்

மிக ஆனந்தமாய் வள்ளி தினைப்புலத்தை அடைய அங்கு நின்ற தோழியாகிய இகுளை

பாங்கி

அம்மா நீ எங்குற்றாய்
ஆரணியம் தனில் நடந்து
எம்மாலே ஆனமட்டும்
எங்கணுமே தேடி வந்தேன்
(அம்மா)

பாய்புலிவாய்ப் பட்டனையோ
படு பேயைக் கிட்டினையோ
நோய் கொண்டு வழிமாறி
நொந்து மிக அலைந்தனையோ
(அம்மா)

வாய்கொண்டு பறவைகளைச்
சேர் என்று துரத்தாமல்
மாயமென மறைந்தாயே
மணமகள் போல நிற்கின்றாய்
(அம்மா)

கண்சிவந்து வாய் வெளுத்து
கனிவான வியர்வையுடன்
ஒண்ணகிலம் விம்மலுற
உடை நெகிழக் காரணம் சொல்
(அம்மா)


வள்ளி பதில்

பாங்கி நீ இவ்வாறு பதைபதைப்புக் கொள்ளாதே
ஓங்கும் மலைச்சாரலிலே சுனை ஒன்றில் நீராடி வந்தேன்
ஏங்கி நீ எரிச்சலுடன் ஏறுமாறாய் பேசாதே
தாங்கி எனைத் தேற்றும் தக்க பாங்கி நீ

இருவரும் இவ்வாறு நிற்க முருகன் வேடனாக வில்லுடன் வருகை


முருகன்

பெண்களே நான் எய்த அம்பு பட்டுக் காயமுடன் ஒரு பெண்யானை
திண்ணென ஓடி வந்து இப்புனத்தே வந்ததுவோ
ஒண்கண் மடவீர்காள் கூறுவீர்கள்
கண்கொண்டு வேடுவனார் கன்னியுடன் கலந்து கொண்டார்


பாங்கி (இகுளை உணர்ந்தாள்)

உங்கள் இருவீரதும் எண்ணக் கருத்தினை நான் உணர்ந்து கொண்டேன்
பாங்காக நீங்கள் பரிவாக பேசுங்கள் நான் அகலுகின்றேன்...

பாகம் 07 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 08 பதிவிடப்படும்...

2009-09-04

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 06


இசையும் கதையும்

வள்ளி முருகனுக்கு தண்ணீர் வழங்கிய பின்,

முருகன் கூறுகிறார்

தண்ணீர்த் தாகத்தை தீர்த்தனை பெண்ணே!
நான் உன்மேல் கொண்ட மோகத்தைத்
தீர்க்க வழி செய்குவாய் பெண்ணே!

வள்ளி கிழவர் பால் சினம் கொள்கிறாள்..

கந்தரலங்காரம்

நத்துப் புரை முடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னை வெஃகிப்
பித்துகொண்டார் போல் பிதற்றுகிறீர் இவ்வேடர்
குலத்துக்கெல்லாம் ஓர் கொடும்பழியைச் செய்தீரே

வெறுப்பு கொண்ட வள்ளி

மாதவத்தோர் போலே வந்தீர்
இப்போ என்மீது மோகம் கொண்டீர்
பாதகம் செய்வதற்கு சற்றும் தயங்கீரோ

நரை திரை வந்துற்ற போதும்
சாதாரணமாக இவ்வார்த்தை கூறீனேரே கிழவரே
நில்லும் இவ்விடத்தே நான் புனம் காக்கப் போகின்றேன்

முருகன் ஏமாற்றல்

வள்ளிக்கு சமாதானம் கூறுவார் மன்னிக்கும் படி

நில்லு நில்லு என்று சொல்லிக் கிழவர் - உனது
நிலைமையறியாதிந்த நெறி மொழி புகன்றேன்
சொல்லுக்குக் கோபிக்கலாமோ- உனது
துணையின்றி நானிங்கே அடி வைக்கலாமோ
என் கைப்பிடித்து எனக்கு வழி காட்டு

என்று முருகன் சல்லாபமாக வள்ளிக்குச் சமாதானம் கூறித் தன் அண்ணனை (பிள்ளையார்) நினைத்தார். அண்ணாவுக்குச் சொல்லாமல் வந்த குற்றம் உணர்ந்தார்.

முருகன் அண்ணாவை அழைத்தல்


அண்ணா நீ வர வேண்டும் வர வேண்டும் - எனது
எண்ணம் நிறைவு பெற நீ வர வேண்டும்
விண்ணவரும் மண்ணவரும் போற்றும் கணநாதனே
பண்போடு யான் உன்னை நினையாது வந்த பிழை பொறுப்பாய்- எனது

நானென தென்கின்ற தன்மை யடங்க
திண்ணிய ஐம்புல வேட்கை யொடுங்க
ஞானம் மனாலயம் மேவி இருந்து
நற்பதம் தருவாய் கருணை புரிந்து அண்ணா

இவ்வாறு முருகன் விநாயகரை அழைக்க வருகின்றார்

யானை உருவில் விநாயகர் வருகை

பாட்டு

என்றங்கு கணபதியைக் கூவ - அந்த
இபராஜமா முகனும் கனிவுடனே வந்தார்
நின்றங்கு பிளிறு மொழி கேட்டாள் - வள்ளி
நெஞ்சுருகி அஞ்சினாள் ஆனையை கண்டு

வள்ளி

தஞ்சம் நீ எனக்கு தரவேண்டும் தவ வேட சுந்தரனே நான்
வெஞ்சினம் கொண்டு உன்மீது பழி சொன்னேன்
நெஞ்சம் பதை பதைக்குதையா என்மீது இரங்கி இந்த
யானை எனைத்தாக்குமுன்னே தஞ்சம் தருவாய் சரணம் சரணம்

(என்று கூறி சரவணனைக் கட்டித் தழுவினாள்)

முருகன் அண்ணாவுக்கு நன்றி கூறி போய் வருக என விடை கொடுத்தல்

தக்க சமயமதில் அண்ணா நீ வந்து சார்தலினால் எனது
இக்காரியம் இனிதே வினை முற்றியது அண்ணா
விக்கினங்கள் தீர்ப்பவனே போய் வருகவே

(விநாயகர் அகலவும்)

முருகன் வள்ளிக்கு உபதேசம்

குறிஞ்சிக் குமரி கேள் நீ முன்னம் என்னை அடைவதற்கு
குறித்த கருத்தின் படி இப்போது அக்கருமம் நிறைவாகிய – ஞான
அறிவு பெறும் உபதேசம் தையல் செவியில் புகட்டி
செறிவான எனதுருவம் கொண்டேன் காண்பாயாக!

பாகம் 06 முற்றிற்று..

முருகனின் திருப்பெருவடிவம் அடுத்த பதிவில் வர்ணிக்கப்படும்...

2009-09-03

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 05


இசையும் கதையும்

வேடுவர்கள் வருகை
:

வேடர்கள் மிக ஆரவாரமாக பல ஒலிகள் முழுங்க மிருக வேட்டையாடி விட்டு வரும்போது முருகன் கிழவன் உருவமாகிறார்.

பாட்டு:

பாட்டோடு வந்தடைந்த பல வேடர்..
கூட்டமதைப் பார்த்த சிலை வேல் வேடுவனார்..
பழுத்த நரைத் தாடியூடன் ஆட்டும் நடை நடந்தே..
அக்கை மணி வெண்ணீற்றின் அழகு...
விழங்க கிழ வடிவினராய் நின்றாரே...

முருகன் நம்பிக்கு நீறு கொடுத்தல்

ஓம்……..
நம்பி உனக்கு வெற்றி நலமே உண்டாகுக!

நம்பி மன்னர் (கிழவரைப் பார்த்து )
கோவே நீர் எங்கு வந்தீர் கூறுமின்கள்...

முருகன்

அப்பனே நம்பியே நான் அருட் குமரி தீர்த்தத்தே ஆட வந்தேன் (இது அருங் கருத்து)

நம்பி மன்னர்

ஆகா.. அப்படியே ஆகட்டும் நம் வள்ளிக்கும் துணையாகட்டும் இங்கிரும் ஐயரே!

(நம்பிராசன் அகன்றதும்)
முருக பஜனை வள்ளி தோழியர்களுடன் படிப்பதைக் கேட்டும் மகிழ்ந்துவள்ளியின் இனிய குரலும் அவள் தன் மீது வைத்திருந்த அன்பையூம் அறிந்ததும்

முருகன்

கிஞ்சுகமே நன்று நன்றென் மிஞ்சு பசி தீர்ப்பாயே…
சாதமிட்டுத் தீராத தனிப்பசியைத் தீர்ப்பாயே…
தாமதம் செய்யாதே தையலே…

வள்ளி அமுதூட்டல்

மாதவத்தோர் போற்றும் மறைக்கிழவரே…
இந்த வனவேடர் உண்பதுவும் வள்ளிக்கிழங்கும்…
பழமும் பயில் தேனும் தினை மாவும் என்பதனால்…
அதனைத் தருகின்றேன் இந்தாரும்!

அப்பெருமான் வள்ளியது கையாலே வாங்கியூண்டார்…
அப்பொழுது விழுங்கிட முடியாது விக்குமாய் போல நடித்து…
இப்பொழுது எனக்கு நீர்த்தாகம் மிகவும் உளது என்று…
சுந்தரியே புனல் தந்திட வழிகாட்டு என்றார்…

வள்ளி

தொண்டை விக்கிக்கொண்டதென்றால் என்செய்வேன்…
அண்டைப் புலவிற்கு அப்பால் உள்ள ஏழு மலைக்கு அருகில்…
தெண்ணீர்ச் சுனையுண்டு அங்கு சென்றால் உமது...
தண்ணீர் தாகம் எல்லாம் அடங்குமென செல்வீராக…

முருகன்

செல்லும் வழியறியேன் திருச்சுனையின் திசையறியேன்…
செல்வியே நீ வந்து நேரான வழி காட்டுவாயே…

வள்ளி

நல்ல வழி காட்டுகின்றேன் ஞானப்பெருங் கிழவரே…
நல்ல நீர் இருக்கும் சுனை அடைவதற்கு என் பின்னே…
மெல்ல மெல்ல நடந்து வாரும்…
(வள்ளியும் கிழவரை கையில் பிடித்துக் கொண்டு செல்கிறாள்)

பாட்டு

ஏறாத மேடெல்லாம் ஏறி அவர்கள் இருவருமாய்…
மாறான கருத்துடன் முருகன் வள்ளி பின் செல்ல…
ஏழுமலை ஏறி அதற்கப்பால் உள்ள அமிழ்தூறும்…
ஊறாது மலை உச்சியினில் இருந்து வரும் நீர் தன்னை அப்பன்…
ஊற்று ஞானம் கூடுமா போல் உவப்பாக உண்டார்…

பாகம் 05 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 06 பதிவிடப்படும்...



2009-09-01

சிறீவள்ளி திருமணம் - பாகம் 04


இசையும் கதையும்

முருகன் வள்ளி முன் வேடுவனாக வருகிறார்

மானே இளங்குயிலே மயிலே மட்ப்பிடியே…
மைந்தொடியே நீ என்னைப் பார்த்து மணம் செய்வாய்…

வள்ளி

ஆர் காணும் வேடுவரே அடியேனைக் காதலித்தீர்…
அப்பாவூம் சோதரும் அறிந்தால் உமைத் தொலைப்பார்…
சீர்காரை என்னைத் திருமணமுஞ் செய்யத்…
திண்டாட்டம் கொள்ளாமல் சென்று விடும் என்றுரைத்தாள்…

முருகன் அதைக் கேட்டு

இன்னவாறு வள்ளி நீ எதிர் மாறு கூறாதே…
இன்ப மொழி யொன்று சொல்லு இன்முறுவல் செய்து விடு…
மன்னும் விழி நோக்கி வழியொன்று காட்டாயோ…
வன்வலைப்படு மான் போன்று எனை வருந்த வைக்காதே…

இவ்வாறு முருகன் ஆடல் செய்கிறார்.
அத்தருணம் வள்ளியின் தகப்பனார் நம்பிராசன் வருகின்றார்.


வள்ளி தம்பால் நாடி வரும் நம்பிராசன் நல்ல…
வள்ளிக்கிழங்கும் நறுங்காட்டுப் பசும்பாலும்…
தெள்ளிய நீரும் தேன் தினையும் நிரம்பச் சுமந்து…
கள்ளமிலாது கருத்துடனே அணைந்தான்…

உரை:

அவ்வேளையிலே அங்கு வந்து நின்ற குமரனாகிய வேடுவனார் செவ்விதான சீர் வேங்கை மரமாகி நல்லதோர் நிழலானார் குமரிக்கு

வேடர்கள்:

எவ்வாறு இவ்விடத்தில் இவ்வேங்கை மரம் வேரூன்றியதோ?
ஒவ்வாது இம்மரத்தை இல்லாது அகற்றுங்கள்...

வள்ளி:

அப்பா நான் இம்மாயமாம் வேங்கை வந்த வகையறியேன்…
அப்பாலாய் இப்பாலாய் தாயாகித் தந்தையாய்த் தானாகி நின்றதென்று…
தப்பாக கூறும் தன் மகளின் கூற்றுதனை மகிழ் நம்பிராசன் நம்பி…
இப்போதைக்கு இம்மரம் நிழலாக நிற்கட்டும் தறியாதீர் எனத்தடுத்தான்...

கந்தப்புராணம்

ஆங்கது காலை தன்னில் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவணெல்லாம் உயர் சிவ நீலதாக
பாங்கமர் சுவடு முற்றும் பல கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வேரன் நின்றான்

வேங்கை மரத்தைத் தறியாதீர்கள் எனத்தடுத்து தம் மகளுக்கு நிழலாகட்டும் எனக்கூறி அவ்விடத்தை விட்டு அகன்றான் நம்பிராசன்

வேங்கை மரம் வேடுவனாகின்றான். முன்பு போல மீண்டும் முருகன் வள்ளியிடம் கூறுகிறான்.

முகுந்தன் மகளே..
வள்ளி எனும் நாமம் பெற்ற உன்னை..
வெகுவாக விரும்பி மோகம் மிகவும் உற்றேன் நான்..
அம்மையே நீ என்னை அருமணம் செய்வாயாகுக…

வள்ளி முருகனுக்கு கூறுகிறாள் (முருகன் திருவிளையாடலை வள்ளி அறிதல்)

ஐயரே நீங்களோ உயர் குலத்தீர் தமியளோ வேடுவிச்சி…
தங்கள் குலம் விட்டு தாவி மணம் பூணுவது அருங் குலத்துக் காகாதே…
ஆகையால் அன்புடையீர் அடியேன் தனை விலகிப்போமின்…
இல்லையெனில் அல்லல் செய்யும் வேடுவரோ உம்மை...
தொல்லைகள் பலவும் செய்திடுவார் தொலைத்திடுவார்…

அன்புடையீர் எனக்கூறக்கேட்ட வேடுவனார் வள்ளியின் இணக்கத்தை நன்கு அறிந்தார். தான் வந்த விசயம்வெற்றி என தனக்குள் எண்ணி விட்டார். :)

பாகம் 04 முற்றிற்று...

வெகுவிரைவில் பாகம் 05 பதிவிடப்படும்...