2009-09-04

சிறீ வள்ளி திருமணம் - பாகம் 06


இசையும் கதையும்

வள்ளி முருகனுக்கு தண்ணீர் வழங்கிய பின்,

முருகன் கூறுகிறார்

தண்ணீர்த் தாகத்தை தீர்த்தனை பெண்ணே!
நான் உன்மேல் கொண்ட மோகத்தைத்
தீர்க்க வழி செய்குவாய் பெண்ணே!

வள்ளி கிழவர் பால் சினம் கொள்கிறாள்..

கந்தரலங்காரம்

நத்துப் புரை முடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னை வெஃகிப்
பித்துகொண்டார் போல் பிதற்றுகிறீர் இவ்வேடர்
குலத்துக்கெல்லாம் ஓர் கொடும்பழியைச் செய்தீரே

வெறுப்பு கொண்ட வள்ளி

மாதவத்தோர் போலே வந்தீர்
இப்போ என்மீது மோகம் கொண்டீர்
பாதகம் செய்வதற்கு சற்றும் தயங்கீரோ

நரை திரை வந்துற்ற போதும்
சாதாரணமாக இவ்வார்த்தை கூறீனேரே கிழவரே
நில்லும் இவ்விடத்தே நான் புனம் காக்கப் போகின்றேன்

முருகன் ஏமாற்றல்

வள்ளிக்கு சமாதானம் கூறுவார் மன்னிக்கும் படி

நில்லு நில்லு என்று சொல்லிக் கிழவர் - உனது
நிலைமையறியாதிந்த நெறி மொழி புகன்றேன்
சொல்லுக்குக் கோபிக்கலாமோ- உனது
துணையின்றி நானிங்கே அடி வைக்கலாமோ
என் கைப்பிடித்து எனக்கு வழி காட்டு

என்று முருகன் சல்லாபமாக வள்ளிக்குச் சமாதானம் கூறித் தன் அண்ணனை (பிள்ளையார்) நினைத்தார். அண்ணாவுக்குச் சொல்லாமல் வந்த குற்றம் உணர்ந்தார்.

முருகன் அண்ணாவை அழைத்தல்


அண்ணா நீ வர வேண்டும் வர வேண்டும் - எனது
எண்ணம் நிறைவு பெற நீ வர வேண்டும்
விண்ணவரும் மண்ணவரும் போற்றும் கணநாதனே
பண்போடு யான் உன்னை நினையாது வந்த பிழை பொறுப்பாய்- எனது

நானென தென்கின்ற தன்மை யடங்க
திண்ணிய ஐம்புல வேட்கை யொடுங்க
ஞானம் மனாலயம் மேவி இருந்து
நற்பதம் தருவாய் கருணை புரிந்து அண்ணா

இவ்வாறு முருகன் விநாயகரை அழைக்க வருகின்றார்

யானை உருவில் விநாயகர் வருகை

பாட்டு

என்றங்கு கணபதியைக் கூவ - அந்த
இபராஜமா முகனும் கனிவுடனே வந்தார்
நின்றங்கு பிளிறு மொழி கேட்டாள் - வள்ளி
நெஞ்சுருகி அஞ்சினாள் ஆனையை கண்டு

வள்ளி

தஞ்சம் நீ எனக்கு தரவேண்டும் தவ வேட சுந்தரனே நான்
வெஞ்சினம் கொண்டு உன்மீது பழி சொன்னேன்
நெஞ்சம் பதை பதைக்குதையா என்மீது இரங்கி இந்த
யானை எனைத்தாக்குமுன்னே தஞ்சம் தருவாய் சரணம் சரணம்

(என்று கூறி சரவணனைக் கட்டித் தழுவினாள்)

முருகன் அண்ணாவுக்கு நன்றி கூறி போய் வருக என விடை கொடுத்தல்

தக்க சமயமதில் அண்ணா நீ வந்து சார்தலினால் எனது
இக்காரியம் இனிதே வினை முற்றியது அண்ணா
விக்கினங்கள் தீர்ப்பவனே போய் வருகவே

(விநாயகர் அகலவும்)

முருகன் வள்ளிக்கு உபதேசம்

குறிஞ்சிக் குமரி கேள் நீ முன்னம் என்னை அடைவதற்கு
குறித்த கருத்தின் படி இப்போது அக்கருமம் நிறைவாகிய – ஞான
அறிவு பெறும் உபதேசம் தையல் செவியில் புகட்டி
செறிவான எனதுருவம் கொண்டேன் காண்பாயாக!

பாகம் 06 முற்றிற்று..

முருகனின் திருப்பெருவடிவம் அடுத்த பதிவில் வர்ணிக்கப்படும்...

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக