2010-06-12

காரைக்கால் அம்மையார்



சைவம் வளர்வதற்கும், காப்பியச்சிறப்பு என்றும் அழியாது இருப்பதற்கும் பன்னிரு திருமுறைகளை கவிநயமும், பக்திச்சுவையும் கொண்ட அரிய நெறிகளாக நாயன்மார்கள் புகுத்தியுள்ளார்கள். சைவ மக்களாகிய நாம் இவற்றை நன்குணர்ந்து படித்து பயனைப்பெற்று எமது சமூகத்துக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இந்த மூல கருக்களாகிய நாயன்மார்கள் வரிசையில் சிறப்புப் பொருந்தியவரான காரைக்காலம்மையாரது வரலாறை இப்பதிவில் பதிக்கலாம் என்று ஓர் எண்ணம்.

காரைக்கால் எனும் நகரில் தனதத்தன் எனும் வணிகனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்த ஒரே ஒரு பெண் குழந்தை புனிதவதியார். இப் பெண்குழந்தை தனது இளமைக்காலத்தில் தனது தோழியர்களுடன் விளையாடும் போதெல்லாம் சிவபெருமான் திருப்பெயரை உச்சரிப்பதும் சிவனடியார்களைக் கண்டால் அவர் பால் சென்று உபசாரம் செய்வதுமாக வாழ்ந்து வரலானாள். இவள் பருவமடைந்த பின்னர் தந்தாயார், நாக பட்டினத்தில் இருந்த பரமதத்தன் என்னும் வணிகனுக்கு தனது அருந் தவப்பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

இவர்கள் காரைக்காலில் இல்லறம் ஒழுகி வரும் நாட்களில் ஒரு நாள், கணவன் தனது அன்பர்களால் தரப்பட்ட இரு மாங்கனிகளை மனைவியிடம் கொடுத்தனுப்பி வைத்தார். அன்றைய தினம் ஒரு சிவனடியார் அம்மையாரது வீட்டிற்கு விருந்தாளியாக வந்த போது அவருக்கு கணவன் அனுப்பிய பழத்தில் ஒரு கனியை உணவுடன் படைத்து அமுது விருந்தோம்பினார். சிவனடியாரை அனுப்பிய பின்னர் தம் கணவனுக்கு எஞ்சிய ஒரு மாங்கனியை மதிய உணவுடன் சேரப் படைத்தார். மாங்கனி விரும்பி உண்பவனான பரமதத்தன் தான் அனுப்பிய மற்றைய மாங்கனியையும் உண்பதற்காக கேட்க அம்மையார் திகைப்படைந்தாள். கணவனுக்கு கொடுப்பத்ற்கு அம்மாங்கனி இல்லாத படியால் தான் என்செய்வேன் என அறையுள் போய் நின்று இறைவனை இறைஞ்சினார். அவ்வேளை இறையருளால் ஓர் மாங்கனி அவரின் கையில் கிடைத்தது. அம்மாங்கனியின் சுவை அதி மதுரமாய் இருந்ததால் கணவன் இம்மாங்கனி நான் அனுப்பியதல்ல. இதை நீ எங்கு பெற்றாய் என்று வினாவினான். அப்பொழுது அம்மயார் முன் நிகழ்ந்தவற்றை கூறிய போது அவ்வரிய புதுமையை நிரூபிப்பாயானால் இன்னும் ஒரு மாங்கனி எனக்கு தர முடியுமா என்று கேக்கவும், அம்மையார் இறைவனது திருவருளினால் மீண்டும் ஒரு அதிமதுரக்கனியை வருவித்துக் கொடுத்தாள். கணவன் மிகவும் அதிசயப்பட்டுப் பார்க்கையில் சற்று நேரத்தில் அந்தக்கனியும் மறைந்து விட்டது.

இவ் அதிசய சம்பவத்தைக் கண்ட பரமதத்தன் மெய்ஞான அறிவு பெற்றவனாய் தன் மனைவியை ஒரு தெய்வமெனக் கருதலானான். இத்தகைய தெய்வீகத்தாயுடன் இல்லற வாழ்வு பொருத்தமற்றது என்பதை உணர்ந்து, தனது மனைவி தெரிந்து கொள்ளாதபடி, அயல் ஊரில் வணிபம் செய்வதாகக்கூறி நாக பட்டினம் என்னும் இடத்தையடைந்து அங்கு ஓர் வணிக குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அங்கு அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு புனிதவதி என நாமமும் சூட்டி இல்லறம் நடத்தினார்கள்.

பல வருடங்கள் தன் கணவனை பிரிந்த புனிதவதியார், மிகவும் துன்பமுடன் வாழ்ந்து வருகையில் பரமதத்தனது செய்தியை அறிந்து வந்த ஒரு சுற்றத்தார், அம்மையாரை நாக பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரமதத்தன் இருக்கும் இடத்தை அடைந்த போது, அங்கு அவன் தனது மனைவு பிள்ளையுடன் தனது மூத்த மனைவியாகிய புனிதவதி அம்மையாரை வரவேற்று வணங்கி நின்று தனது முன் நிகழ்வினை தன் இளைய மனைவியாரிடம் கூறினான். அவர்களும் இந்த தெய்வீக அம்மையை வீழ்ந்து வணங்கினார்கள்.

குழந்தைக்கும் தனது நாமத்தைச்சூட்டி தன்னை தெய்வமாக்கிக் கொண்ட தனது கணவனின் செயல் கண்டு, இனியும் எனது இந்த இளமையான உருவம் தேவையில்லை என இறைவனிடம் வேண்டினார் அம்மையார். உடனே அவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இறையருளினால், அவரது உடம்பின் தசைகளெல்லாம் அகன்று எலும்புக் கூடாகிப் பேய் வடிவு கொண்டார். மிக்க மகிழ்ச்சியடைந்த அம்மையார், எம்பெுருமானது கயிலையங்கிரி சென்றடைவேன் என்ற அவாவுடன் சிரசினால் நடந்து செல்வாராயினார். திருக்கயிலை அடைந்த அம்மையாரைக் கண்டு உமை தேவியார் இங்கு வரும் பேய் உருவம் யாதென எம்பெருமானிடம் வினாவினார். அப்படியல்ல, எனது அம்மை வருகிறார், "அம்மையே" என சிவபெருமான் அழைக்கவும், அது கேட்ட காரைக்காலம்மையார் "அப்பா" என்று ஆனந்தமாகக்கூவி இறைவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

எக்காலத்தும் மாறாத அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும். பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். இன்னும் ஒன்று வேண்டும். நீ ஆடும் போது நான் மகிழ்ந்து பாடி உன்னடிக்கீழ் இருத்தல் வேண்டுமென ஈசனிடம் வேண்டிக்கொண்டார் அம்மையார்.
பின்னர், இறைதிருவருளினால், அம்மையார் திருவாலங்காடு அடைந்து சர்வலோக நாயகனது திருநடனக்காட்சியை கண்டு தரிசித்து மூத்த திருப்பதிகங்கள் பாடியருளி ஒரு பங்குனிச் சுவாதி தினத்தன்று பேரின்பநிலை பெற்றார்.

0 வாசகர் கருத்துக்கள்:

கருத்துரையிடுக